ஒரு கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக நடிகர் விவேக் கூறினார்.
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற மாணவியர் பேரவை நிகழ்ச்சியில் 1,000 மரக்கன்றுகளை நட்டிவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
பகுத்தறிவு கொள்கையை நகைச்சுவையுடன் கலந்து வழங்கியதால்தான் சினிமாவில் எனக்கு புகழ் கிடைத்தது. பெரியாரின் பகுத்தறிவு கொள்கை, விவேகானந்தரின் இளைஞர்கள் மீதான உயரிய சிந்தனை இவை இரண்டும் என்னை மிகவும் கவர்ந்தவை.பெரியார் எத்தனையோ போராட்டங்களை நடத்தினாலும், பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக போராடியது தான் உயரியது. விளைநிலங்கள், விலை நிலங்களாக மாறி வருவது வருத்தம் அளிக்கிறது.
ஒரு நாட்டில் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதி இருக்க வேண்டும். ஆனால், இப்போது இதன் பரப்பு குறைந்துவருவதால் மழை குறைந்து வருகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு அப்துல்கலாமை சந்தித்தபோது மரம் நடுவதற்கு விழிப்புணர்வு செய்யும்படி அறிவுறுத்தினார். அப்போது தொடங்கி இதுவரை 21.50 லட்சம் மரக்கன்றுகளை நட்டியுள்ளேன். 1 கோடி மரக்கன்றுகள் நடுவது தான் எனது இலக்கு என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் தான் பாலா என்னும் நகைச்சுவை இல்லாத சீரியஸாக போகும் படத்தில் நடத்திருக்கிறேன். இது ஏப்ரலில் வெளியிடப்படவுள்ளது. இந்திய திரை உலகில் எந்த சிரிப்பு நடிகரும் நடிக்காத பாத்திரம் இது. சமுதாயத்தில் கூலிப்படை என்னும் முறையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம் இது.அதேபோல முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் பாலக்காட்டு மாதவன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறேன். இதில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். வை ராஜா வை என்னும் படத்தில் நடித்து வருகிறேன். நடிகர்சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடிக்க இருக்கிறேன். இப்படத்துக்கான சூட்டிங் ஏப்ரல் முதல் நடைபெறும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், இணைச் செயலர்கள் செ.நல்லசாமி, எஸ்.என்.பாலசுப்பிரமணியன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கே.சின்னசாமி, என்.சந்திரசேகர், கல்லூரி முதல்வர் (பொ) என்.பி.கலைவாணி, மாணவியர் பேரவை பொறுப்பாளர்கள் எஸ்.சுமதி, செந்தில்குமார், கவிதாலயம் இசைப் பள்ளி நிர்வாகி கவிதாலயம் ராமலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment